சனி, 3 ஏப்ரல், 2010

இஸ்ரேல் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் காஸா மீது கடுமையான தாக்குதல்


காஸா: ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா வலயம் மீது இஸ்ரேல் போர் விமானங்களும் ஹெலிகொப்டர்களும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளன.நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 13 தடவைகள் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இக்கண்மூடித்தனமான தாக்குதலில் மூன்று குழந்தைகள் காயமடைந்திருப்பதாக பாலஸ்தீன அவசரசேவைத் தலைமையதிகாரி கூறியுள்ளார்.
ஆனால், பாலஸ்தீன இராணுவத்தின் ஆயுத உற்பத்தி நிலையங்களை இலக்குவைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவத்தினர் பி.பி.சி.க்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இஸ்ரேல் படையினரால் காஸா மீது மேற்கொள்ளப்பட்ட மிகமோசமான தாக்குதல் இதுவெனக் கூறப்படுகின்றது.
ஆனால், இஸ்ரேல் படையினர் காஸாவிலுள்ள இரும்புத் தொழிற்சாலைகளையும் பால் பண்ணைகளையும் படையினரின் சில பகுதிகளையும் இலக்குவைத்தே தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாலஸ்தீன படையினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் கடந்த வாரம் நடைபெற்ற மோதலில் 2 இஸ்ரேல் சிப்பாய்கள் பலியான கான் யூனிஸ் நகரில் 4 விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், காஸாவினால் மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் கிழக்கு இஸ்ரேலில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப் 16 ரக யுத்த விமானங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த விமானத் தாக்குதலில் அகதி முகாமிலுள்ள தொழிற்பட்டறை ஒன்றும் சேதமடைந்துள்ளது.
காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்படுவதும் அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் விமானத் தாக்குதல் மேற்கொள்வதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக