புதன், 14 ஏப்ரல், 2010

குழந்தைகளும் விபத்தும் 1


குழந்தைகளும் விபத்தும் 1

idrees.lk
குழந்தை பராமரிப்பில் பெற்றோர் விபத்துகளைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதும் முக்கியமாகும். விபத்துகள் தொடர்பாக இலங்கையில் மிகக்குறைவாகவே ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. வருடாந்தம் நிகழும் விபத்துகளில் பெரிதும் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். இவ்விபத்துகளில் பெரும்பாலானவை தவறுதலாக அல்லது கவனயீனம் காரணமாக ஏற்படுகின்றன. இவற்றைக் கருத்திற் கொள்வோமாக இருந்தால் இவற்றை இலகுவாகத் தவிர்த்துக் கொள்வதற்கும் அல்லது பெருமளவு குறைத்துக் கொள்வதற்குமான அறிவை நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.
குழந்தைகளும் விபத்தும் என்ற இந்தத் தொடரில் குறிப்பாக வீட்டுவிபத்துகளை தவிர்த்துக் கொள்ள தற்காலிக வழிமுறைகளையும் விபத்து நிகழும் பட்சத்தில் எடுக்கவேண்டிய உடனடி நடவடிக்கைகளையும் விளக்கலாம் என நினைக்கிறேன். வீட்டு விபத்துகளில் குழந்தைகள் மரணித்தல் அல்லது அங்கவீனமடைதல் அல்லது காயப்படல் போன்றவற்றை பெருமளவு குறைத்துக் கொள்ள இவை உதவும்.
வீட்டு விபத்துக்கள் என்பது வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் (முற்றம், கலஞ்சியம், மலசலகூடம், கிணறு, மரம், கரேஜ், பாதைகள், வீட்டுத்தோட்டம் ஆகிய பகுதிகள் அடங்கும்) நிகழும் விபத்துகளைக் குறிக்கின்றது. இது நம்நாட்டில் குழந்தை பராமரிப்பில் எதிர்நோக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
வீட்டுவிபத்துகள் ஏற்படும் போது உடனடியாக உரிய முதலுதவியை வழங்குவதன் மூலம் அவற்றால் ஏற்படக்கூடிய துரதிஷ்டமான பின்விளைவுகளையும் பாதிப்புகளையும் பெருமளவில் குறைத்துக் கொள்ளமுடியும். அநேகமாக எல்லாக் குடும்பங்களிலும் இத்தகைய முதலுதவியினை வழங்கமுடியும். அவ்வாறே வீட்டுவிபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்வதன் மூலம் தவித்துக் கொள்ள முடியும்.
வீட்டுவிபத்து என்பது வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் நிகழும் விபத்துகளைக் குறிக்கின்றது என்பதை ஏலவே நாம் குறிப்பிட்டோம். தொண்நூறுகளின் ஆரம்பத்தில் செய்யப்பட்ட கணிப்பீட்டின் படி வீட்டுவிபத்துகள் காரணமாக ஆண்டுதோறும் 2 முதல் 2.5 இலட்சம் பேர் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். வீடுகளில் கைமருந்து செய்வோர் தனியார் வைத்தியசாலைகளில் செல்வோரைக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.
வீட்டுவிபத்துக்குள்ளாவோரில் அதிகமானவர்கள் குழந்தைகளாவர். இவ்விபத்துகளில் பெரும்பாலானவை சமயலறை, கிணற்றடி, மலசலகூடம், வாசல்படி, பள்ளம் படுகுழிகள், தண்ணீரோடும் கான், வீட்டுத்தோட்டம் போன்ற இடங்களிலேயே நிகழ்கின்றன. இவ்வாறு நிகழும் விபத்துகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
  • கூரான ஆயுதங்கள், உபகரணங்கள், உடைந்த பாத்திரங்கள் என்பவற்றால் ஏற்படும் காயங்கள், சிராய்ப்புகள், கீறல்கள், விழுதல், முட்டிமோதுதல், நெருக்குப்படுதல் போன்றவை காரணமாக ஏற்படும் காயங்கள், எழும்பு முறிவு, உளுக்கு, நசிவுகள் என்பன.
  • மண்ணெண்ணை விளக்கு, சுடுதண்ணீர், நீராவி மற்றும் கொதிக்கும் திரவங்கள் என்பவற்றால் ஏற்படக்கூடிய எரிகாயங்கள் கொப்புலங்கள்.
  • கிணறுகள் அல்லது நீரோடைகள், குளங்கள் போன்றவற்றில் விழுவதன் காரணமாக மூழ்குதல்.
  • மின்சாரத்தில் தாக்கப்படல்.
  • கிருமிநாசினிகள், மருந்துகள் என்பவற்றால் ஏற்படும் விபத்துகள்.
  • பாம்பு, பூரான், தேள், செவ்வால் அரணை போன்ற விஷஜந்துகள் தீண்டல்.
  • கண், காது, மூக்கு தொண்டை ஆகியவற்றுடன் ஏதேனும் பொருட்கள் விழுதல் அல்லது விழுந்து அடைத்துக் கொள்ளுதல்.
இத்தகைய விபத்துகளின் போது கை, கால், பாதம், தலை, மூக்கு, தொண்டை போன்ற உறுப்புகளே பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளுக்கு உடனடியாக பொருத்தமான முதலுதவியும் வைத்திய சிகிச்சையும் அளிக்கப்படுவது அவசியமாகும். அப்போதுதான் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுவதையும் அல்லது அங்கவீனங்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
முதலுதவி
முதலுதவி என்பது சிகிச்சை அல்ல. மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் வரை நோயாளிக்கு நிவாரணம் வழங்கும் முகமாகவும் எதிர்வரக்கூடிய கடும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ளவும் மேற்கொள்ளப்படும் ஒரு தற்காலிக நடவடிக்கை ஆகும்.
விபத்தில் சிக்கிய குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வரை காற்றோட்டமுள்ள வசதியான ஓர் இடத்தில் வைத்திருக்க வேண்டும். அக்குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பயம், அதிர்ச்சி என்பவற்றை அகற்ற முயலவேண்டும். பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் பயந்திருந்தால் அதைக் குழந்தைக்கு காட்டிக் கொள்ளக்கூடாது. மருத்துவ சிகிச்சையின் பின்னர் விரைவில் சுகம் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையை குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும்.
விபத்திற் சிக்கிய குழந்தை மயக்கமடைந்திருந்தால் அல்லது நினைவிழந்திருந்தால் அதனை இடப்புறமாக திருப்பி தலையைச் சிறிது பணிவாக வைத்திருக்கும் வகையில் படுக்க வைக்க வேண்டும். நோயாளி வாந்தி எடுக்கும் பட்சத்தில் அவ்வாந்தி மூச்சுக்குழாய்க்குள் செல்வதை இது தடுக்கும். இத்தகைய நோயாளிக்கு குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக்கூடாது.
பெரும்பாலான விபத்துகளின் போது ஏற்படக்கூடியது மயக்கமாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் சுத்தமான காற்றோட்டம் அவசியமானதால் நோயாளியைச் சுற்றி ஆட்கள் குழுமிநிற்பது தவிர்க்கப்படவேண்டும். தலை சற்றுப் பணிவாக இருக்கும் வகையில் குழந்தையைப் படுக்கவைக்க வேண்டும். இல்லாவிட்டால் உட்கார்ந்த நிலையில் இரண்டு முழங்கால்களுக்கிடையே தலையைக் கவிழ்த்து கீழாக இருக்கும்படி செய்ய வேண்டும்.
இடுப்பு நெஞ்சுப் பகுதிகளில் உடை நெகிழ்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காற்று வீசவும் முகத்துக்கு குளிர்ந்த நீரைதெளிக்கவும் வேண்டும். மயக்கம் தெளிந்தவுடன் சூடான பானம் ஏதாவது குடிக்கக் கொடுக்க வேண்டும்.
மயக்கத்தைப் போன்று பெரும்பாலான விபத்துக்களில் நிகழக்கூடிய மற்றொரு விசயம் அதிர்ச்சியாகும். அதிக வியர்வை, தோல் வெளிறிவிடல், நினைவிழந்து போதல் என்பன இதன் அறிகுறிகளாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் நோயாளியின் கால்கள் தலைப்பகுதியைவிட உயரமாக இருக்குமாறு படுக்கவைக்க வேண்டும். குளிரைப் போக்க துணியால் போர்த்த வேண்டும். நினைவு இருப்பின் சூடான பானத்துடன் ‘பெரசிட்டமோல்‘ போன்ற வலியைக் குறைக்கும் மருந்துகள் எதையாவது கொடுக்க வேண்டும்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக