புதன், 14 ஏப்ரல், 2010

குழந்தைகளும் பிரச்சினைகளும் 2


குழந்தைகளும் பிரச்சினைகளும் 2

idrees.lk
8 மிகையான உபதேசம்
மனித மனம் அளவுக்கு மிஞ்சிய மிகையான உபதேசத்தை வெறுக்கின்றன. அதனால் சலிப்படைகின்றன. நபிகள் கூட அளவாகவே உபதேசித்துள்ளார்கள். அவர் மணித்தியாலக்கணக்கில் உபதேசிக்கவில்லை.
9 குழநதை பற்றிய தப்பெண்ணம்
குழந்தையின் நடத்தையில் எப்போதும் தப்பெண்ணம் கொள்வதும் குழந்தையை திருத்துவதற்கான சிறந்த வழிமுறையன்று. இது குழந்தைக்கும் பெற்றோருக்குமிடையில் நம்பிக்கையின்மையை தோற்றுவித்துவிடும். இது ஊடாட்டத்திற்கான வாசலை அடைத்துவிடும். எந்தவொரு பிரச்சினையையும் பரஸ்பரம் நலலெண்ணத்தின் அடிப்படையில் சுமூகமாக தீர்க்கமுடியும். வெளியில் உள்ள ஒருவர் நமது குழந்தையைப்பற்றி சொல்லி விட்டால் நாம் தப்பெண்ணம் கொண்டு குழந்தைகளை தண்டிக்ககூடாது. நம்மோடு பல வருடங்களாக வாழும் குழந்தை வெளியாரை விட நமக்குமிகுந்த நம்பிக்கையானது என்பதை மறந்து விடக்கூடாது.
10 குற்றஞ்சாட்டல்
எப்போதும் குழந்தையை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி வைத்து விசாரிக்கும் நீதிபதி போல் பெற்றோர் மாறிவிடக்கூடாது. குற்றஞ்சாட்டுவதற்கு முன்பு நீதிபதியாய் மாறுவதற்கு முன்பு நீங்கள் ஒரு நல்ல தந்தையாக-தாயாக இருக்க வேண்டும்.
குழந்தையை பார்த்து கேட்கின்ற எல்லா கேள்விகளிலும் குற்றஞ்சாட்டும் சாயல் தொனிக்கக்கூடாது. ஏன் சுணங்கி வந்தாய் என்ற கேள்வி குழந்தையை அமைதியிழக்கச் செய்துவிடும். ஏன் சுணங்கி வந்தாய் என்று கேட்பது குற்றஞ்சாட்டுவதை போலத்தான் தப்பெண்ணத்தையும் உருவாக்கிவிடும். கேட்கும் கேள்வி உங்களுக்கும் குழந்தைக்கும் பிரிவை உண்டுபண்ணிவிடக்கூடாது. குழந்தை மனந்திறந்து கதைக்கக்கூடியதாக எமது கேள்வி அமைய வேண்டும். கேள்வியிலிருந்து விலகி பொய் சொல்லும் நிலைக்கு நமது கேள்வி அமைந்துவிடக்கூடாது
11 தண்டனை
தண்டனை ஒரு தீர்வேயல்ல. அது நோயை குறைக்கவோ டென்ஷனைக் குறைக்கவோ ஒருபோதும் உதவாது. தண்டிக்கப்படும் குழந்தை உங்கள் பேச்சை கேட்கும். ஆனால் அது தற்காலிகமானது என்பதை மறந்துவிடாதீர்கள். தண்டிக்கப்படும் குழந்தை உங்களுக்கு முன்னிலையில் ஒரு நடத்தையையும் நீங்கள் பிரசன்னமில்லாத இடங்களில் இன்னொரு நடத்தையையும் வெளிப்படுத்தும்
12 சொல்லிக்காட்டுதல்
உன்னை பெற்றெடுக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? உனக்கு உம்மா வாப்பாவுடைய பெறுமதி விளங்குதில்லையே! குழந்தையிடம் உங்கள் மகத்தான பணிகளை பயான் பண்ணிக்கொண்டிருக்கக்கூடாது இதை கேட்கும் குழந்தை உங்களைவிட்டு மெல்ல மெல்ல விலகிச்செல்ல விரும்பும். சில போது தனது தேவைக்காக தானே அவற்றை செய்துகொள்ள ஆரம்பிக்கும் அல்லது வீட்டிலிருந்து வெளியேறி சுதந்திரமாக வாழ ஆசைப்படும்.
எல்லாம் உனக்காகத்தான் செய்கிறேன் உனக்காகத்தான் கஷ்டப்படுகிறேன். உனக்காகத்தான் கிடந்து சாகிறேன் என்று உங்கள் குழந்தையைப்பார்த்து கூறாதீர்கள்.
13 நொட்டை சொல்லுதல் (விமர்சித்தல்)
குழந்தை எந்தக்காரியத்தை செய்தாலும் அதற்கு நொட்டை சொல்லுதல் கூடாது. அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தால் குழந்தை எந்த வேலையையும் செய்யாது காலப்போக்கில் ஒதுங்கிவிடும் தனிமையை நாடும். இவ்வாறு ஒதுங்கும் போது குழந்தை ஒன்றுமே செய்வதில்லை. சரியான சோம்பேறி என்கிறமாதிரி பெற்றோர் கதைப்பதும் உண்டு.
14 எச்சரிக்கை செய்தல்
எச்சரிக்கை செய்வதும் குழந்தையின் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. அது குழந்தையின் மனதில் எச்சரிக்கைக்கான பைலை திறக்கப்போவதுமில்லை. உதாரணமாக புகைக்காதே புகைப்பதை நான் உனக்கு எச்சரிக்கிறேன் என்பது புகைப்பதற்கான ஒரு புதிய பைலை குழந்தையின் மூளையில் திறந்துவிடும் வார்த்தையாகும். குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் பிணக்கு வரும் போது குழந்தை புகைப்பதை நாடத்தொடங்கும். அதன் எதிர்விளைவாக குழந்தை அக்காரியத்தை செய்யத்தொடங்கும்.
15 கொச்சிக்காய் அரைத்து பூசுதல்
கட்டுக்கடங்காத குழந்தை என பெற்றோரால் இணங்காணப்படும் குழந்தையை கட்டிவைத்து அல்லது அறையினுள் போட்டு பூட்டி அம்மியில் வைத்து அரைக்கப்பட்ட கொச்சிக்காயை உடல்முழுவதும் புசி விடுகின்ற பழக்கம் முன்பு இருந்து வந்தது. இதுவும் குழந்தையின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையாக கையாளப்பட்டுவந்துள்ளது. இது மிகக்கொடூரமான வழிமுறையாகும். இதயமுள்ள எந்த மனிதனும் இதை ஒரு திருத்தும் வழிமுறையாக ஏற்கவே மாட்டான்.
16 காஞ்சவோண்டி பூசுதல்
இது ஒரு செடி இலைத்தாவரம். நீளமான முக்கோணம் போன்ற இலைகள் கொண்டவை. இலைகளின் விளிம்பு அலங்காரமாக வெட்டப்பட்டது போல் இருக்கும். இந்த இலை உடலில் பட்டால் மஸ மஸ என்று கடிக்கத்தொடங்கும். பட்ட இடத்தில் சொறியச் சொறிய சிவந்து புண்ணாகிவிடும். இதவும் குழந்தைகளை திருத்துவதற்கு ஒரு வழிமுறையாக கையாளப்பட்டது. இந்த மரங்கள் அருகி விட்டதாலும் கல்வியறிவு அதிகரித்தமைனாலும் இந்த தண்டனை முறைகள் இல்லாமல் போய்விட்டது.
17 நெருப்பால் சுடுதல்
சொற்படி கேட்டு நடக்காத குழந்தைகளுக்கு ஏதாவது இரும்பை நெருப்பில் போட்டு சூடாக்கி அல்லது அடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் விறகை எடுத்து கையில், தொடையில் சூடு போடுதல் இதன்முறையாகும். இதுவும் பெரும்பாலும் குறைந்துவிட்டது என்று சொல்வதற்குமில்லை. கையில் சூட்டுக்காயங்களுடன் சில குழந்தைகளை நான் அண்மைக்காலங்களில் அவதானித்துள்ளேன். ‘பிரளிபன்னவும் உம்மா கையில் சுட்டுப்போட்டாங்க சேர்‘  என்று சொல்கிறார்கள். இதுவும் இஸ்லாம் வெறுக்கின்ற தண்டனை முறையாகும்.
18 துலாக்கோலில் கட்டி தண்ணீர் இறைத்தல்
துலாக்கோல் என்பது கிணற்றிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்காக அதற்கருகிலேயே நடப்பட்டிருக்கும் ஒரு இயந்திரம். அதன் கோல் மிக நீளமானது. அதன் அடிப்பகுதியில் குழந்தையை வைத்துக் கட்டி கிணற்றிலிருந்து தண்ணிர் இறைக்க ஆரம்பித்தால் மேலும் கீழும் குழந்தை போய் வர தலைச்சுற்று, மயக்கம், பயம் என்பன ஏற்படும். இதன்மூலம் குழந்தையை திருத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனது நண்பருக்கு நடந்த இந்த காட்சியை  நான்குழந்தைப்பருவத்தில் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக