குழந்தைகளும் விபத்தும் 3
வீட்டுவிபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் அவதானத்துடனும் கவனத்துடனும் நடந்துகொள்வதன் மூலம் தவித்துக் கொள்ள முடியும்.
வீடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் கவனயீனம், தவறுதல் காரணமாகவே நிகழ்கின்றன. இத்தகைய விபத்துகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க குழந்தைகளை பயிற்றுவிப்பதன் மூலமும் பெற்றோர் தமது குழந்தைகள் விடயத்தில் அவதானமாக இருப்பதன் மூலமும் இவ்விபத்துகளில் பெரும்பாலானவற்றை தவிர்த்துக் கொள்ள முடியும். இதற்கான சில ஆலோசனைகளை நோக்குவோம்.
குழந்தைகளை தனியே வீடுகளில் விட்டுவிட்டுப் போவதை தவிர்த்தல் வேண்டும். வீட்டுக்குள்ளும் வெளியிலும் அவர்கள் ஓடிவிளையாடும் போது நாம் அவதானத்துடன் இருக்க வேண்டும். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் திடீரென விபத்துகள் நிகழலாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தண்ணீர் கிடக்கும் அல்லது பொலிஷ் செய்யப்பட்ட தரை அல்லது மாபிள் தரை வழுக்கக்கூடும். இத்தகைய இடங்களில் குழந்தைகள் ஓடிவிளையாடுவதைத் தவிரத்தல் வேண்டும். வீட்டில் தரை, திண்ணை, படிக்கட்டுகள் என்பவற்றைத் துடைத்து துப்பரவாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வாசல்படியில் இடும் கிழிந்துபோன கால்துடைக்கும் தட்டி, கிழிந்துபோன தரைவிரிப்புகள், பாய்கள், வீட்டுத்தரையில் காணப்படக்கூடிய குழிகள், பள்ளங்கள் என்பவற்றில் குழந்தைகள் இடறிவிழாமல் இவற்றை அகற்றிவிடலாம் அல்லது சீர் செய்யலாம்.
வீட்டினுள்ளேயோ வெளியேயோ படிகளிலேயோ குழந்தைகள் ஓடியாடி விளையாடும் இடங்களில் தடையாக இருக்கக் கூடிய வகையில் பூச்சட்டி, கதிரைகள், விளையாட்டுப் பொருட்கள், பந்து போன்ற இன்னோரன்ன பொருட்கள் இருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தொட்டில், கட்டில்களில் உறங்கும் குழந்தைகள் நித்திரையில் உருண்டு கீழே விழுந்துவிடாதிருக்க தலையணை போன்ற போதிய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமயலறை, கிணற்றுக் கட்டு, சேறுதாங்கி, மலசலகூடம் போன்ற ஈரலிப்பான இடங்களில் சேறு, பாசி போன்றவை படிந்து காணப்படுவதால் குழந்தைகள் வழுக்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. எனவே இத்தகைய இடங்களில் சேறு, பாசிகளை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற கிணறுகளைச் சுற்றி உறுதியான கட்டுக்களை அமைக்க வேண்டும். கிணற்றினுள் தலையை விட்டுப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும்.
குழந்தைகள் மேலே ஏறுவதற்கு விரும்புவர். இதனாலும் விபத்துகள் வரலாம். எனவே தலைவாசல், கேற் என்பவற்றை மூடிவைத்து அவற்றில் பிள்ளைகள் ஏறாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏணிகள் இருந்தால் அவற்றைக் கீழே சாய்த்து வைத்தல் வேண்டும். வீட்டு முற்றம், வீட்டுத்தோட்டத்திலுள்ள மரங்களின் கிளைகளையும் வெட்டிவிடலாம். அல்லது குழந்தைகளின் ஏறும் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினால் பெற்றோர் அந்த இடங்களில் மிகவும் கண்காணிப்பாக இருக்க வேண்டும்.
வீடுகளிலுள்ள மதில்கள், வேலிகள் என்பவற்றை குழந்தைகள் ஏறாதவகையில் கட்டிக்கொள்ள வேண்டும். ஜன்னல்களை முடியுமாயி்ன் கம்பிவலையாவது போட்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மொட்டைமாடி, பல்கனி போன்ற இடங்களுக்கு குழந்தைகளைக் கொண்டு செல்வதை அல்லது அதில் ஏறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
குப்பைகூலங்களைப் போடுவதற்காகத் தோண்டும் குழிகள், பள்ளங்கள், ரோட்டருகில் காணப்படும் கான்கள் என்பவற்றைத் தூரத்திலிருந்து பார்த்தால் தெரியக்கூடிய வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றைச் சுற்றியுள்ள புதர்கள், செடிகொடிகள், புல் என்பவற்றை அகற்றுதல் வேண்டும். தேவையற்ற குழிகளை மூடிவிடல் வேண்டும். முடியுமாயின் குழிகளைச் சுற்றி பாதுகாப்பு வேலியை அமைக்க வேண்டும்.
வெட்டுக்காயங்களை ஏற்படுத்தக்கூடிய கத்தி, அலவாங்கு, மண்வெட்டி, திருகானி போன்ற ஆயுதங்களைக் குழந்தைகள் எடுத்து விளையாடும் வண்ணம் வைக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எட்டாத அல்லது தூரமான இடத்தில் அவற்றை வைக்க வேண்டும்.
உடைந்த கண்ணாடித்துண்டுகள், பீங்கான் கோப்பைத் துண்டுகள், சிரட்டை, பழைய முற்கம்பி, மீன், இறைச்சி எலும்புகள் போன்றவற்றை காலில் குத்தக் கூடியவாறு கண்ட இடங்களில் போடாது குப்பை மடுவில் போடவேண்டும்.
ரோஜா, போகன்விலா, கற்றானை போன்ற முற்கள் உள்ள செடிகளை குழந்தைகள் விளையாடும் இடங்களில் வளர்க்கக்கூடாது.
காய்கள், கிளைகள், ஓலைகள் என்பன மேலிருந்து விழக்கூடிய மரங்களின் அடியில் குழந்தைகள் விளையாடுவதைத் தவிர்த்தல் வேண்டும். சிறிது தட்டுப்பட்டாலும் கீழே விழக்கூடிய உயரமான மரங்களில் பூச்சட்டிகள், மீன்தொட்கள் என்பவற்றை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சமையலறையில் பிள்ளைகளுக்கு எட்டாத உயரத்தில் அடுப்பை அமைக்க வேண்டும். அது முடியாவிட்டால் அடுப்புக்கு அருகே குழந்தைகள் வராதவாறு தடைகளை அமைக்க வேண்டும். குழந்தைகள் தீக்காயங்களுக்குள்ளாதல், கொதிநீரால் தாக்கப்படல், துரும்பு கொழுத்துதல் என்பவற்றைத் தவிர்க்க இது உதவும். சமையல் முடிந்தவுடன் கேஸ் சிலின்டரை அடைத்துவிட வேண்டும்.
கொதிநீரால் பாதிக்கப்படுவதைப் போன்றே கேத்தல், பானை என்பவற்றிலிருந்து வெளியேறும் நீராவியாலும் பிள்ளைகள் காயப்பட இடமுண்டு. எனவே இதுவிடயத்திலும் கவனமாக இருத்தல் வேண்டும். பெரும்பாலான எரிகாயங்கள் மண்ணென்ணெய் விளக்குகள், குப்பி லாம்புகள் கவிழ்ந்து தீப்பிடிப்பதாலயே நிகழ்கின்றன. இதனைத் தவிர்க்க கவிழ்ந்தால் தீப்பிடிக்காத பாதுகாப்பான விளக்குகளை உபயோகித்தல் உகந்தது. விளக்குகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அல்லது அவர்கள் புழங்காத இடத்தில் வைப்பது பாதுகாப்பானது.
பிள்ளைகளைக் குளிப்பாட்ட அல்லது கழுவ கொதிநீரைத் தயார் செய்த பின்னர் பிள்ளையை அந்த இடத்தில் ஒருபோதும் தனியே விட்டுச் செல்லக்கூடாது. அப்படிப் போக நேர்ந்தால் கொதிநீரில் தண்ணீரைக் கலந்துவிட்டுப் போகவும்.
வீட்டில் புழங்கும் மின்சார உபகரணங்களில் மின்சார ஒழுக்கு காணப்படுகிறதா என்பதைக் கவனிக்கவும். மின்னழுத்தி, மின்சூடாக்கி, மின்கேத்தல், மின்னடுப்பு, ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை குழந்தைகள் தொட்டுவிளையாடவிடக்கூடாது. அதன் இணைப்புத் துவாரங்களில் குழந்தைகள் விரல்களை விடுவதைத் தவிர்க்க வேண்டும். உபயோகிக்காத சந்தர்ப்பங்களில் அவற்றை அனைத்து களற்றிவைக்க வேண்டும்.
சிறியளவு தண்ணீரில்கூட ஒரு குழந்தை மூழ்கிவிடக்கூடும். எனவே பேசின், வாளி என்பவற்றில் தண்ணீரை நிரப்பிவிட்டு அவ்விடத்தில் குழந்தையைத் தனியாக விட்டுச் செல்லக்கூடாது. வாளியில் நீர்வைத்திருந்தால் அதில் கவனமாக இருங்கள். வெற்றுவாளியை எப்போதும் தலைகீழாகத் கவிழ்த்து வையுங்கள். மழையின் பின்னர் வீட்டுக் கான்கள், தோட்த்திலுள்ள பள்ளங்கள், குழிகளில் தண்ணீர் நிரம்பியிருக்கும் அத்தகைய இடங்களுக்கு குழந்தைகள் தனியே செல்வதை தவிக்க வேண்டும்.
கடல், ஆறு, குளம் நீரோடைகள் என்பவற்றில் குழந்தைகள் குளிக்கும்போது பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும். இந்த இடங்களில் குழந்தைகள் எக்காரணம் கொண்டும் தனியே விட்டுச் செல்லக்கூடாது.
(தொடரும்)
http://www.idrees.lk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக