செவ்வாய், 21 ஜூலை, 2009

அகதிச் சிறுமிக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யுமாறு,வன்னித் தளபதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காயமடைந்த நிலையில் வன்னி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த சோபிகா சுரேந்திரநாதன் (வயது 13) என்ற சிறுமியை உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வன்னி இராணுவத் தளபதிக்கு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்தக் குடும்பத்தவர்கள் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஷிராணி பண்டாரநாயக்கா, சலீம் மர்க், ஜகத் பால பட்டபெந்தி ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை நீதிமன்றம் விடுத்தது.

பிரித்து வெவ்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் குடும்பத்தின் ஆறு உறுப்பினர்களையும் அவர்கள் சார்பாக சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவைப் பரிசீலித்தமையை அடுத்து ஒரே முகாமுக்கு உடனடியாக மாற்ற நீதிமன்றம் பணித்திருந்தது என்பது தெரிந்ததே.

இந்தக் குடும்பத்தவர்களில் காயமுற்ற நிலையில் இருக்கும் சிறுமி சோபிகாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் அவ்விடயம் இழுபறிப்படுவதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறினார்.

இதனையடுத்து அச்சிறுமியை உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வன்னி இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி றியாஸ் ஹம்ஸா, நேற்றுவரை இந்த முகாம்களில் இருந்து வயதானோர் 7 ஆயிரத்து 400 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என மன்றுக்குத் தெரிவித்தார்.

வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக